Wednesday, 7 March 2018

அவதி

அனாமிக்கா,அவளுடன்
அலைகளில் மிதந்த
மழலைகள் நினைவாக...........


———
பாய்ந்து வந்த
பனையுயர் நுரைகடல்
அன்றொரு கணம்
தனைமறந் தாடியதாம்
அதிகாலை நித்திரையில்
அவள் கால்மணிக ளிசைகேட்டு.

அவதி
மார்கழியாய் நீயெம்
மனங்களில் வருகையில்
தன் வினையை நினைத்து
தயங்கு கின்றதக் கொலைகடல்
நிலந்தாவ.
அவள் பிஞ்சுக் கால்களை
தந்தை நெஞ்சத்தில் உதைக்கையில்
என்னதான் தந்துதைத்தாள்
ஈழத்தின்
தாளத்தையோ?
மலையளவு கலை வழியும்
மட்டக் களப்பினிலே
தலை வழியப் பூச்சூடி
தாவிடவோ மேடைகளில்.
அன்றி
கூத்தாடி ஊரினிலே
கால்களுக்கு சதங்கை கட்டி
காத்தாடியாய் தன்னை
களரிகளில் காட்டிடவோ.
கலைப்பசிக்கு இரையாகக்
கனவு கண்ட கன்னிகையே
அலைப் பசிக்கு இரையாகி
அவதியானாய்
ஆழ்மனதில்.
- களப்பூரான் தங்கா

No comments: